பூலித்தேவர்


வாழ்த்து பா
""பூலிநாட்டை ஆண்டு வெள்ளையனுக்கு நெல் கட்டேன் என்று உரைத்தாய்சந்தனம் மணம் உடைத்து
மாமழையும் நீருடைத்து நீல்கடலும் உப்புடைத்து பூலிதேவா
உன் வீரம் எம் தேவருடைத்து """"
முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்ல! ஜான்சிராணி லக்குமிபாயோ அல்ல!!சிப்பாய் கலகமும் அல்ல!!! தென்னகத்து பூலித்தேவன் தான். ஏனோ வராலாறுகள் தமிழர்களை மூடிட்டு வைத்து மறைக்கின்றன.மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன். தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி தன்னிகரற்றுத் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன்! நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்ட செங்கோலொச்சிய பாளையக்காரனாவான். தன்பாளையத்திற்கு மட்டுமின்று மேற்குப் பாளையத்தார்களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச்செய்த மாபெரும் போர்வீரன்.


இந்திய விடுதலைக்காக வெள்ளையரை எதிர்த்து முதன் முதலில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முதல் முழக்கமிட்ட விடுதலைப் போராளி பூலித்தேவனேயாவான். இவனுடைய வீர வராலாறு இந்திய விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அரை நூற்றாண்டுக்கு மேலாக தென்னகத்தை ஒரு கலக்குக் கலக்கிய மாவீரன் பூலித்தேவனின் சாதனைகள் பற்றி இன்னமும் சரித்திர ஆசிரியரகள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தமிழ் மறவன் பூலித்தேவனின் வரலாற்றுச் சுவடிகளில் சிலவற்றைக் இங்கு காண்போம்.மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு உட்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன.இவ்வாறு பாளையங்களாக பிரிக்கப்பட்டதன் காரணம் பாண்டிய வமசத்தினர் மீண்டும் படைத் திரட்டி ஆட்சியைப் பிடிப்பதை தவிர்ப்பதற்காகத்தான். மதுரை, திருச்சி, கொங்குநாடு ஆகிய பகுதிகளில் தெலுங்கர்களையே நாயக்க மன்னன் நியமித்தான். திருநெவேலிச் சீமையில் தான் பெரும்பாலும் தமிழர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
மேலும் பாண்டிய வம்சத்தின் சிலரையும் பாளையக்காரர்களாக நியமித்து ஓரளவு வம்சாவழி எதிர்ப்பையும் அடக்கினான். மக்களிடத்து இவ்வாறு அதிகார வரம்பை பகிர்ந்தளித்ததால் மக்கள் எதிர்ப்பும் குறைந்தது. ஆனால் அதற்குப் பிறகு வந்த நாயக்க அரசர்களின் ஆட்சி பலவீனமடைந்தது. இதனால் ஓரளவு சுய அதிகாரம் பெற்றிருந்த பளையக்காரர்கள் சிறிது சிறிதாக நாயக்கராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விலகினார்கள்.இத்தனைய பாளையங்களில் ஒன்றுதான் நெற்கட்டான் செவ்வல் பாளையம் இந்திய விடுதலைப் போருக்கான முதல் குரல் இந்த பாளையத்திலிருந்து தான் ஒலித்தது. அந்த குரலுக்கு உயிர் கொடுத்தவரின் பெற்றோர்கள் பெயர் சித்திர புத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர்.1-9-1715 ல் மாவீரன் பூலித்தேவர் இவர்களின் புதல்வராக தோன்றினார். இயற்பெயர், ‘காத்தப்ப பூலித்தேவர்’ என்பதாகும் ‘பூலித்தேவர்’ என்றும் ‘புலித்தேவர்’ என்றும் அழைக்கலாயினர் பூலித்தேவர் பிறந்த பொழுது அந்த பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியுற்றனர். அதற்கு காரணம் பூலித்தேவரின் தந்தை சித்தி புத்திரத் தேவரின் நல்லாட்சிதான். அவருடைய ஆட்சி நல்ல முறையில் இருந்ததால்தான் மக்கள் அவர் மீது மதிப்பு வைத்திருந்தார்கள். அதனால் தான் அவருக்கு பூலித்தேவர் பிறந்தபொழுது, மக்கள் மகிழ்வுற்றார்கள்.சித்திரபுத்திரத் தேவர் எந்த பிரச்சினையும் இல்லாத அறுபத்து மூன்று ஆண்டுகள் மக்கள் போற்றும் வண்ணம் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாளைக்காரர்கள் மத்தயில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. இத்தகைய ஒரு சூழலில்தான் பூலித்தேவர் வளர்க்கப்பட்டார். சிறுவயதில் தாதிகளிடம் தன்னுடைய முன்னோர் பற்றிய வீர வரலாறுகளைக் கேட்டு மகிழ்ந்தார்.மேலும் அந்த பிஞ்சு உள்ளத்தில் இறையுணர்வு பற்றிய தெளிவான விளக்கமும் பதிய வைக்கப்பட்டது. இவ்வாறு சிறுவயதில் ஊன்றப்பட்ட வீர உணர்ச்சியும், இறையுணர்வும் இறுதிவரை அவர் மனதில் இருந்தது. பூலித்தேவர் ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது.சிறு வயதிலேயே முன்னோர் பெருமைகளைப் பற்றிக் கேள்விப் பட்டதால் தாமும் அவர்களைப்போல் பேரும் புகழும் பெற்றுத் திகழ வேண்டும் என்ற உறுதி பூலித்தேவர் மனதில் இருந்தது.

இலஞ்சியைச் சேர்நத சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார் மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்ட்டது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் அவருக்கு மிகுந்த விருப்பம் புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பமுண்டு.இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்வேர் என்றே அழைத்து வந்தனர் பூலித்தேவரைப் பார்த்தவுடன் அவர் ஒரு மாவீரன் என்று கூறுமளவிற்கு அவருடைய உடல்வாகு இருந்தது. அவரைப் பற்றிய ஒரு நாட்டு பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். சோதியைப் போல முகமிருக்கும், திண் தோள்களை உடையவர், பல்லோ பளபளக்கும், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருககுப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள். பூலித்தேவரின் வயதுக்கு மீறிய ஆற்றலைக் கண்டுதான் அவருடைய பெற்றோர்கள் துணிந்து அவரை அத்தனை இளம் வயதில் மன்னராக்கினர். மன்னரைப்போலவே நெற்கட்டான் செவ்வல் மக்களும் இந்த முடிவை வரவேற்றார்கள்.பின்னர் பூலித்வேருக்கு திருமண ஏற்டபாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கை துணைவியாக அமைந்தவர் அவருடைய மாமன் மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார்தான். கயல்கண்ணி நல்ல அழகி மட்டுமல்ல, வீர விளையாட்டுக்கள் விளையாடுவதிலும் பூலித்தேவருக்கு உற்ற துணையாக விளங்கியவர். கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவரின் இல்லற வாழ்ககை கண்ட அவருடைய பெற்றோர்கள் மிகவும் மகிழ்சியடைந்தார்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவசச்சி, சித்திர புத்திர தேவன் மற்றும் சிஞானப் பாண்டியன் என்று மூன்று நன்மக்கள் பிறந்தனர்.

பூலித்தேவருக்கு பதினெட்டு வயதிருக்கும் பொழுது கிழக்குப் பளையங்களைச் சேர்ந்த இலவந்தூர் , ஈராட்சி ஆகியவற்றிற்க்கு ஏற்பட்ட எல்லைத் தகராறைத் தீர்த்து வைக்கச் சென்றிருந்தார். அச்சமயம் சிவகிரிப் பாளையத்தான் வந்து கால் நடைகளைக் கவர்ந்து சென்றான். இந்தச் செய்தியை ஒற்றன் மூலம் பூலித்தேவருக்கு கூறப்பட்டது. உடனே அவர் தளபதியான சவனத்தேவருக்கு செய்தி அனுப்பி சிவகிரிப் பளைக்காரணை தடுத்து நிறுத்துமாறு கட்டளையிட்டார்.உடனே 150 வீர்களுடன்ட புறப்பட்டு நேராக சிவகிரிப் படைகளைத் தாக்குவதற்குச் சென்றார். பூலித்தேவர் போர்க்களத்தில் நுழைந்ததும் சிவகிரி படைகளின் எண்ணிக்கை கனிசமாக் குறைந்து கொண்டே வந்தது. இதனைக் கண்டு மேலும் பலர் களத்தை விட்டு ஓடினர். பூலித்தேவர் இறுதியில் வெற்றிகரமாக கால்டைகளை மீட்டுச் சென்றார். அக்காலப்போர் முறையின் முதற்கட்டமே வேற்று நாட்டின் கால்நடைகளைக் கவர்ந்து செல்வதுதான்.போரில் வெற்றிபெற்றாலும் சவணத்தேவர் கூடலூர் வரை எதிரிகளை துரத்திச் சென்று போரிட்டார். அவர்களின் எல்லைக் கருகில் சென்று விட்டதால் எதிரிகளின் எண்ணிக்கை கூடிவிட்டது.ஆனாலும் மனம் தளராது போராடி பல பேரை சவணத்தேவர் கொன்று குவித்தார். ஆனால் களத்தில் அவர் தன்னுடைய ஒரு காலை இழந்தார். அதையும் பொருட்படுத்தாமல் அவர் போராடியதில், இறுதியில் அவருக்கு முழு வெற்றி கிடைத்தது. ஆனால் அதற்கு விலையாக தன் உயிரைக் கொடுக்க நேரிட்டது.மாவீரன் பூலிதேவருக்குத்தான்ஒரு வீரனின் மதிப்பும் அவனுடைய இழப்பையும் உணரமுடியும் . அந்த வீரத்தளபதியின் நினைவாக பூலித்தேவர் வீரக்கல் நட்டு பெருமைப்படுத்தனார். பூலிதேவரின் இளம் வயது போர் வெற்றி அவருக்கு போர்க்கள நுணுக்கங்களில் மேலும் முதிர்ச்சியைக் கொடுத்தது.மதுரையில் விசயரங்க சொக்கநாத நாயக்கர் (1704-1731) ஆட்சிக்காலத்தில் மதுரையின் வட பகுதியில் புலி ஒன்று பதுங்கியிருந்தது. அவ்வழியாகப் போவோரையிம், வருவோரையும் கொன்று கொண்டிருந்தது. எவராலும் அடக்க இயலாது போன அந்தப் புலியை அடக்கு வோருக்கு தகுந்த சனமானம் வழங்கப்படும் என்று அனைத்துப் பாளையக்காரர்களுக்கும் ஓலை அனுப்பபட்பட்டது. இச்செய்தியை அறிந்தவுடன் பூலித்தேவர் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். சிங்கம் போல் நடை நடந்து வரும் காலடி ஓசையைக் கேட்டவுடன் புலியனது பூலித்தேவர் மீது பாய்ந்தது.
முதல் பாய்ச்சலுக்கு புலியிடமிருந்து ஒதுங்கியவர், இரண்டாவதாக பாய்வதற்கு முன்னர் சட்டென்று புலியின் மீது பாய்ந்து அதன் பின்னங்கால்களைப் பிடித்து தலைக்கு மேல் தூக்கி ஓங்கி தரையில் அடித்தார் . பூலித்தேவரின் வலிமையைத் தாங்க இயலாத புலி இரத்தம் கக்கி இறந்தது. புலிவேட்டை என்கின்ற பெயரில் பல வீரர்கள் துணையோடும். துப்பாக்கிகளோடும் பூலித்வேர் செல்லவில்லை. தனியொருவராக நின்று வென்றார்.இதனால் இவருடைய புகழ் தென்னகம் முழுவதும் பரவியது. மதுரை மன்னனும். வடக்காத்தான் பூலித்தேவன் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தான்.பூலித்தேவர் சிறுவயது முதலே கடவுள் பக்தியுடையவராக இருந்தார். தாம் எவ்வளவுதான்வலிமையுடையவராக இருந்தாலும் அனைவருக்கும் மேல் ஒருவர் இருக்கின்றார் என்ற உணர்வுதான் அவரை சுயகட்டுப் பாட்டில் வைத்திருந்தது. இல்லை யென்றால் அவருக் கிருக்கும் ஆற்றலுக்கு அவர் மற்றவர்களைப் போல நாடு பிடிக்ககிளம்பியிருக்கக் கூடும்.அவர் தன்னுடைய குல தெய்வமான உள்ளமுடையாரைத் தினமும் வணங்கி வந்தார். வேதியர்களைக் கொண்டு வேதம் முழங்கச் செய்து, தினந்தேறும் அன்னதானம் செய்து வந்தார், அதற்காக நிலங்களையும் மானியமாக மட்டுமே அரசராக இருந்தாலும் தன்னால் முடிந்தவரை பலவித கோயில்களுக்கு நற்பணி செய்து வந்தார்.பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தாரே தவிர தமக்கோ தம் சந்ததியருக்கோ சேர்த்து வைத்து சுகபோகமாக வாழவேண்டும் என்று நினைத்த தில்லை. தன்னுடைய குலதெய்வமான பூலுடையார் கோயில் தவிர சங்கரன்கோயில், பால்வண்ணநாதர் கோயில், வாசுதேவ நல்லூர் அர்த் நாரீசுவரர் கோயில், நெல்லை வாகையாடி அம்மன் கோயில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டது.கோவில் பணிகள் தவர மற்ற பொதுப் பணிகளான நெடுந்தொலைவு பயணம் செய்பவர்களுக்கு இளைப்பாற ஆங்காங்கே மண்டபம் கட்டுதல், சத்திரம் அமைத்து உணவு வழங்குதல், ஆங்காங்கே நீர் நிலைகள் அமைத்தல், வெட்டவெளி பிரதேசங்களில் மரங்கள் நட்டு நந்தவனமாக்குவது, மற்றும் விளைச்சல்பெருக கால்வாய்கள் அமைத்துபாசன வசதி பெருக்குவது என்று மக்களின் தேவை அறிந்து மன்னர் பணி செய்தார்.
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அடிப்படை வசதிகளைச் செய்ய ஜனநாயக அரசு தட்டுத் தடுமாறும் நிலையில், பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்கையின்அரவணைப்பில், எந்த குறைகளும் இல்லாது வாழ்ந்த நிலையிலும் கூட, மேலும் மக்களுக்கு வசதி செய்துகொடுக்க வேண்டும் என்று நினைத்த மன்னருக்கு, இன்று பேச்சளவில் மட்டுமே இருக்கும் பொதுவுடமை சிந்தனைகள் சற்று அதிகமாகவே இருந்தது என்று தான் கூறவேண்டும்.மன்னர் பூலித்வேருக்கு பொதுவுடைமை சிந்தனை மட்டுமல்ல, தொலைதூர நோக்கும் சற்று அதிகமாகத்தான் இருந்தது. பூலித்வேர் ஆட்சி செய்து காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் அதற்குள் ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்தகாலம். இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்துஎன்பதை மன்னர் உணர்ந்தார்.அதனால் அனைத்துப் பளையக் காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். இத்தகைய ஒரு கோணத்தில் இதுவரை சிந்திக் காத பிற மன்னர்களுக்கு, இந்தக் கருத்து புதியதாகவும் அதே சமயம் தவிர்க்க முடியாத தாகவும் இருந்தது.ஆனால் நடைமுறையில் எத்தனை பேர் ஒத்துழைத்தனர் என்பது பிற்கால வரலாறு. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் நோக்கம், தன்னுடைய ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக மட்டும் அல்ல. தன் தாய்திருநாடு அன்னியர் வசம் சிக்கிவிக் கூடாது என்கின்ற தன்மான உணர்ச்சிதான். மேலும் அன்னியராட்சியில் குடிமக்களின் நலன் அவ்வளவாக போற்றப் படுவதில்லை.பூலித்தேவர் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர். நாயக்கராட்சியும் வலுவிழந்து முகம்மதியர்கள் கையில் விழுந்தது. பின்னர் அது மகாராஷ்டிர அரசர்கள் கைகளுக்கு மாறி பின்னர் மீண்டும் முகம்மதியர் கைக்கு வந்தது.ஆனால் ஆற்காடு நவாபுக்கும் மற்றோரு முகம்மதிய அரசனுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவனரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்தனர். இந்த இரு பிரிவினருக்கும் நடந்த குழப்பத்தப் பயன்படுத்தி, பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள்.
இத்கு சூழ்நிலையில் ஆற்காடு நவாபு ஆங்கிலேயர்களின்உதவியை நாடினான். இருவருக்கும் நடந்த ஒப்பந்தப்படி ஆற்காடு நவாபு வரிவசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தான். அன்றிலிருந்து ஆங்லேயர்கள் இந்திய மன்னர்களோடு நேரடியாகப் போரிட ஆரம்பித்தனர்.ஆற்காடு நவாபின் பதவியை தக்க வைத்துக்கொள்ளும் ஆசையினால் பின்னர் இந்திய நாட்டு மக்கள் இருநூறு வருடங்கள் துயரப்பட நேர்ந்தது. பாளையக் காரர்கள் கப்பம் கட்டாததால் கர்னல்ஹெரான் தலைமையில் கும்பினிப் படைமற்றும் ஆற்காடு நவாபின் அண்ணன்மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும் 1755-ஆம் ஆண்டு பாளையக்காரர்களைத் தாக்குவதற்குப் புறபட்டது. பேச்சளவில் இருந்த பாளையக்காரர்களின் ஒற்றுமை போர் என்றவுடன் உடைந்தது.ஒவ்வொறு பாளையக்காரனும் சமாதானம் என்கிற பெயரில் கப்பம் கட்டினார்கள். இந்த நிலையில் கர்னல்ஹெரானும் மாபூஸ்கானும் தனியே பிரிந்து இரு திசைகளில் சென்று போரிட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக மாபூஸ்கான் முதலில் போரிடச் சென்றது, நெற்கட்டான் செவ்வல் பாளையத்துக்காரரான பூலித்வேருடன். மாபூஸ்கான் போன சுவடு மறைவதற்குள் பூலித்வேரின் படைகாளல் விரட்டியடிக்கப்பட்டான்.அதனால் மாபூஸ்கான், கர்னல்ஹெரானுக்குச் செய்தி அனுப்டபி உடனே புறப்பட்டுவரச் செய்தான். இருவரும் சேர்ந்து பூலித்வேரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இத்தனை இருந்தும் பூலித்வேரின் கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட உண்டு பண்ணமுடியவில்லை. பல நாட்கள் ஆகியும் பலன் ஒன்றுமில்லை.மாறாக அவர்களிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது . இந்த செய்தியைத் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் உடனடியாக கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னாபின்னமாக்கினார். முதல் முதலாக வெடித்த சிப்பாய் கலகத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பூலித்வேர் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு அதில் வெற்றி பெற்றார். 1755- ஆம் ஆண்டு ஒலித் பூலித்தேவரின் முதல் சுதந்திரக் குரல் பின்னர் பலமுறை எதிரொலித்தது. 1772-ஆம் ஆண்டு முத்துவடுகநாதன், வேலு நாச்சியார் தலைமையிலும், 1795- ஆம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதி தலைமையிலும், 1799-ஆம்ஆண்டு வீரபாண்டியகட்டபொம்மன் தலைமையிலும், 1801ஆம் ஆண்டு மருது சகோதரர் தலைமையிலும் எதிரொலித்தது.
பின்னர் 1806-ஆம் ஆண்டு வேலூர் சிப்பாய்க் கலகமாகவும், 1857-ஆம் ஆண்டு வடநாட்டு சிப்பாய்க்கலகமாகவும் வெடித்தது. பின்னர் அது நாடு தழுவிய போராட்டமாக உருப்பெற்றது. இவ்வாறு விட்டு விட்டு ஒலிகாமல் இந்த சுதந்திரக் குரல் ஒட்டுமொத்தமாக ஒரலித்திருக்குமேயானால் இந்திய நாடு அடிமைப் பட்டிருக்காது.ஆங்கிலேயருடனான முதல் போரில் பூலித்வேர் வெற்றி பெற்றாலும் மறுபடியும் அவர்கள் தாக்குவார்கள்என்கிற காரணத்தினால் மீண்டும் பாளையகாரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள். பூலித்தேவரின் கூட்டணி முயற்சி ஆற்காடு நவாபுக்கும் ஆங்கிலேயர்க்கும் தெரியவந்தது. உடனே அவர்கள் மற்ற பாளையக் காரர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பதவி ஆசையைக் காட்டி, தங்கள் வசப்படுத்தினார்கள்.இதன் மூலம் சுதேசிப்படை என்கின்ற புதிய படையை உருவாக்கி அதை யூசுப்கான் என்பவனிடம் ஒப்படைத்தனர். இந்த பூசுப்கான் பிறப்பால் மருதநாயகம் என்ற தமிழன். பின்னர் நாளடைவில் மதம் மாறி ஆங்கிலேயர்களோடு துணை சேர்ந்து பின்னர் சுதேசிப் படைகளின் தலைவன் ஆன இவன், பதவி ஆசைக்காக, அன்னியராட்சியை எதிர்த்து முதல் குரல் கொடுத்த மாவீரன் பூலித்தேவரை கடுமையாக எதிர்த்தான். இத்தகையவர்கள் இருக்கும் வரை எத்தனை விதமான படைகள், மற்றும் படை கலன்கள் இருந்தாலும், அது நியாயமான போராக இருந்தாலும், வெற்றி பெற இயலாது என்பது சரித்திரச் சான்று!!.1755-ஆம் ஆண்டு தொடங்கி 1767-ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது.முதலில் ஆதரவாக இருந்த திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்டவர்மனும் மற்றும் பாளையக்காரர்களும் மன்னரைக் கைவிட்டு விட்டார்கள், தளபதி வெண்ணிக் காலடி, முடேமியா என்ற பட்டாணியத் தலைவன் போன்றோர் மாவீரன் பூலித்தேவருக்காக தங்கள் உயிரையே கொடுத்தனர்.
பூலித்வேரின் படைகள் ஆங்கிலேயப் படைகளைக் காட்டிலும் எண்ணிக்கையிலும் படைக்கலனிலும் குறைந்ததாயினும் அவரால் பன்னிரெண்டாண்டுகளுக்க மேல் தாக்குப் பிடிக்க முடிந்ததென்றால், அதற்கு அவருடைய போர்முனைத் தந்திரங்கள் பற்றிய அறிவும் அவருடைய உள்ள உறுதியுமே காரணமாகும். தன்னுடைய படைகளை ஒட்டுமொத்தமாக ஈடுபடுத்தாமல் சிறிது சிறிதாகப் பிரித்துப் போரிட்டார், பின்னர் அடுத்த போருக்குள் மீண்டும் படையைப் புதுப்பித்து விடுவார். சிறிய படையோடு போரிட்டாலும் தந்திரமாகப் போரிட்டதால் அவரால் வெற்றிபெறமுடிந்தது.அதற்கேற்றாற் போல் பூலித்தேவரின் படைவீரர்களும் தங்கள் உயிரைப்பற்றிக் கவலைப்படாமல் ஆங்கிலேய மற்றும் சுதேசிப்படை வீரர்களின் உயிரை மாய்த்விட வேண்டும் என்று நினைத்துத்தான் போரிட்டார்கள்; இத்தனை தீவிரமாக வருடக் கணக்காக போரிட்டாலும் பூலித்தேவர் தன்னுடைய பளையத்தை மறந்துவிடவில்லை. போர் என்றால் பொதுவாக வாழ்வு ஸ்தம்பித்து விடுவது வழக்கம்.ஆனால் மன்னர், போர் நடைபெறும் காலத்டதில் செய்வதறியாது திகைத்து நின்ற உழுவர்களிடத்துச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்து, உழவர்கள் தங்கள் உழவுத் தொழிலை குறைவின்றி மேற்கொள்ளுமாறு செய்தார். உழவுத் தொழில்பாதிக்கப்படுவது நாட்டு மக்கள் நலனை மட்டுமல்ல, போர் நடைபெறுவதையும் பாதிக்கும் என்பதை நன்கு உணர்ந்து செயல்பட்டார்.பூலித்தேவருக்கு வீரம் மட்டுமல்ல வீவேகமும் செயல்பட வேண்டிய நேரத்தில் செயல்பட்டது என்றுதான் கூறவேண்டும். ஆற்டகாடு நவாப்பின் அண்ணன் மாபூஸ்கான் ஆங்கிலேயரோடு ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக தன்னுயிரைக் காத்துக் கொள்வதற்கு ஓட வேண்டியதாயிற்று.அத்தகு நிலையில் அவன், தான் எதிர்த்துப் போரிட்ட பூலித்தேவரிடமே சரணடைந்தான். பூலித்வேரும் இவன் எதிரியாயிற்றே என்று பொறுமையிழந்து செயல்படாது. தஞ்சம் என்று வந்தவனுக்கு அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றினார். மாபூஸ்கானுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தார். அவன் வேற்று மதத்தவன் என்பதால் அவன் வழிபடுவதற்குத் தக்க ஏற்பாடும் செய்து கொடுத்தார்.மன்னரின் அன்பையும் அவரின் பண்புள்ளத்தையும் பார்த்த மாபூஸ்கான், தான் இவரைப் போய் எதிர்த்தோமே என்று வெட்கி வேதனைப்பட்டான். இவ்வாறு பல நிகழ்ச்சிகள் மன்னரைப் போர் புரியும் ஒரு மன்னனாக மட்டுமல்லாது, பலவிதத்திலும் அவரை ஒரு முழு மனிதான வெளிப்படுத்தியது.
ஆனால் அவருடைய மனிதத் தன்மையால், பிரித்தாளும் நயவஞ்சகமும், நாடு பிடிக்கும் சூழ்ச்சியும் கொண்ட ஆங்கிலேயர்களை அடக்க முடியவில்லை. ஆங்கிலேயர்களின் சூழு்ச்சி போதாதென்று கூட இருந்தே குழி பறித்தவர்களும் அதிகம்.ஆனால் இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்வேர் மறுத்துவிட்டார். போரில் வெற்றி பெற்றால் பின்னர் அதற்கு ஈடாக முதலில் சிறு நிலத்தைக் கேட்டு, பின்னர் படிப்படியாக ஆங்கிலேயன் போய் பிரெஞசுக்காரன் வந்தான் என்கின்ற நிலையை உருவாக்க பூலித்வேர் விரும்பவில்லை.1761-ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்வேரின் படைகள் யூசுப்பான் படைகளிடம் தோற்றன. பத்தாண்டுகளாக போராடிம் வெற்றி பெற இயலாத நிலையில் இங்கிலந்திலிருந்து தருவிக்கப்ட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்வேரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.அதற்குப்பின் ஆங்கிலேயப் படை, தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய் படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்குத் தந்திரமாகத் தப்பிச் சென்றார். அவர் கோட்டையை விட்டு சென்றாலும் ரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். இதற்கிடையில் பூலித்தேவரின் கையில் போகவிருந்த யூசுப்பானின் உயிர், அவன் காட்டிய அலட்சியப் போக்கால் ஆங்கிலேயராலேயே சிறை பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டான். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவரால் மீண்டும் கோட்டையை பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.ஆனால் இதையறிந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரை பிடிக்க ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர், இத்தகைய பெரும்படையை எதிர் பார்க்காத நிலையிலும் பூலித்வேர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.அச்மயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச் சென்றார். 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர்.
பூலித்தேவரின் மரணம் பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிளேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் “பூலிசிவஞானம்” ஆனார் என்றும் நாட்டுப்டபுற பாடல்கள் கூறுகின்றன.மற்றோது கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்டதிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.(எனைப் பொருத்தவரை இது தான் உண்மையாக இருக்கலாம் எனத்தோன்றுகிறது காரணம் நேதாஜியையும் இப்படித்தான் செய்திருப்பார்கள்லண்டன் வெடிகுண்டு விசயத்தில் ஒரு மாணவனை விசாரணையின்றி சுட்டுக்கொண்றிக்கிரார்கள் கொஞ்சம் கூட ஈவிரக்கமின்றி)அவர் எப்படி மறைந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம். அவர் இறுதி வரை அன்னியருடன் சமரசம் செய்யாது போராடியே மாண்டார். இந்திய விடுதலைப் போரின் முதல் வீரரான பூலித்தேவர் அன்று மன்னர்களிடையே இருந்த பிரிவின் காரணமாக இறுதிவரை தனியொருவராகப் போராடி மக்கள் மனதில் சுதந்திரத் தீயை தன்னுயிர் கொடுத்து வளர்த்தார். அது மக்களின் தேசிய எழுச்சிப் போராட்டங்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. விடுதலை இயக்க சரித்திரம் படைத்தான் பூலிதேவன்
பூலித்வேனின் முதல் முழக்கத்தை புலவர் கூட்டம் தமிழால் புகழ் பாடட்டும். எதிர்வரும் காலம் அவனைப் போற்றிப் புகழும். தாயகம் வென்றிடவும் தண்டமிழ் வாழ்ந்திடவும் முதல் குரல் கொடுத்த வீரச்சிங்க மறவன் பூலித்தேவனன்றோ! ஆனால் அவரின் பெயர் தேசிய சரித்திரத்தில் ஏன் இடம் பெறவில்லை என்று தெரியவில்லை, பூலித்தேவரைப் பற்றிப் படிப்பதோடு நின்று விடாமல், அந்த மாவீரன் இறுதிவரை ஏங்கிக் கொண்டிருந்த, ஒற்றுமையுணர்வு இனிமேலாவது நமக்குள் வளர்வதற்கு நாம் முயற்சிச்க வேண்டுவது மிகவும் இன்றியமையாததாகும்..இதை முழுமையாகப் படிப்பவர்களுக்கு சற்று மணம் கணக்கும், கணக்கனும் http://velu.blogsome.com/2006/02/07/poolidevan/

விடுதலைப் போருக்கு வித்திட்ட பூலித்தேவன் செப்பேடு
இந்தியாவிலேயே முதன் முதலில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்தவர் பூலித்தேவன். வரி பெறுவதற்கு வந்த அலெக்சாந்தர் கெரான் என்பவனோடு 1755இல் பூலித்தேவன் செய்த போரே இந்தியாவில் கிழக்கிந்தியக் குழுமத்துக்கு எதிரான முதல் பேராகும்.பூலித்தேவன் அளித்த கொடைச் செய்தி எழுதப்பட்ட செப்பேடு ஒன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாணயவியல் ஆய்வாளர் விஜயகுமாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அச்செப்பேடு 27 செ.மீ. நீளமும் 15 செ.மீ. அகலமும் உடையது. ஒரு கிலோ எடையுள்ள அச்செப்பேட்டில் ஒரு பக்கத்தில் மட்டும் 40 வரிகள் எழுதப்பட்டுள்ளன. அச்செப்பேட்டை ஈரோடு கொங்கு ஆய்வு நடுவ ஆய்வாளர் புலவர் இராசு ஆய்வுசெய்து பின்வரும் செய்திகளைத் தெரிவித்துள்ளார்.அதாவது, சேரநாட்டின் ஒரு பகுதியான பூழிநாட்டை ஆண்ட பாண்டியனுக்கு உட்பட்டு ஆட்சி புரிந்ததால் பூழித்தேவன் என்ற பெயர் பூலித்தேவன் என அழைக்கப்பட்டதென்றும். அவர் முழுப்பெயர் காத்தப்ப பூலித்தேவன் என்றும் ஆய்வாளர் ந. இராசையா கூறியுள்ளார்.
1748ஆம் ஆண்டு இச்செப்பேடு எழுதப்பட்டுள்ளது. நெற்கட்டுச் செவ்வலில் கோட்டை கட்டி அவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் பூலித்தேவன். நெற்கட்டுச் செவ்வலில் இராமகோவிந்தப்பேரி என்ற பெயரில் பெரிய குளம் இருந்தது. அக்குளம் உடைந்து சிதைந்து பல ஆண்டுகள் பாசனம் இல்லாமல் இருந்தது. அதைச் சரி செய்யப் பூலித்தேவன் கேட்டுக் கொண்டதனால் நெற்கட்டுச் செவ்வலில் உள்ள பிறக்குடையாக் குடும்பன் என்பவர் தன் செலவில் இராமகோவிந்தபேரிக் குளத்தைப் புதுக்குளமாக அமைத்தார். அதற்குப் பதிலாக விபவ ஆண்டு ஆடி மாதம் 25ஆம் நாள் பூலித்தேவன் பிறக்குடையாக் குடும்பனுக்கு மானியபூமி நன்செய் நிலம் வழங்கியதோடு அவர் நிலங்களுக்குச் சில ஆண்டுகள் வரிச் சலுகையும் அளித்த விவரம் இந்தச் செப்பேட்டில் உள்ளது.
குளத்தில் உள்ள மீன்களைப் பிடிப்பதன் மூலம் வருகின்ற வருவாயில் இருந்து குளம் பேணிக்காப்பும், தூர் வாருதலும் நடைபெற வேண்டும் என்றும், இவற்றிற்குக் கணக்கெழுதி ஒப்புவிக்க வேண்டும் என்றும் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலங்கள் அளக்கப்பட்டு அடையாளமாக அவற்றிற்கு எண்கள் இடப்பட்டுள்ளன. 85,86,87,88 ஆம் எண் நிலங்கள் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளன. பொதுவாக அக்காலச் செப்பேட்டில் வழக்கமாக இருக்கும் வடமொழிச் சொற்கள் இன்றித் தனித்தமிழில் செப்பேடு எழுதப்பட்டுள்ளது. விடுதலைப் போரை முதலில் தொடங்கிய பூலித்தேவனைப் பற்றி அரிய செய்திகளைக் கூறும் இச்செப்பேடு வரலாற்று முதன்மை வாய்ந்தது என்று புலவர் செ. இராசு கூறுகிறார்.- நன்றி. தமிழோசை, 6-7-2008thanks

மற(றை)க்கப் பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள்
இந்திய சுதந்திர விடுதலைப் போர்களில் பங்கு பெற்ற தென்னாட்டு மன்னர்களில்பலரும் பிரபலம் அடைந்தாலும், முதல் முதல் சுதந்திரப் போருக்கு வித்திட்டவன் ஆன"மாவீரன் பூலித் தேவன்" பற்றி இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் அறிந்திருக்கவாய்ப்பில்லை. இனி இந்தத் தலைப்பில் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட சிலமுக்கியமான ஆனால் மறக்கடிக்கப் பட்ட/ மறந்து போன தலைவர்கள் பற்றி நேரம்இருக்கும்போது எழுதலாம் என்ற எண்ணம்.
பொதுவாக 1857-ல் தான் இந்திய விடுதலைப்போர் ஆரம்பித்ததாய்ச் சொன்னாலும் நூறாண்டுகளுக்கு முன்பே தென்னாட்டில்புரட்சிக்கான வித்து இடப்பட்டது. அதை முதன் முதலில் செய்தவர். 1750- ம் ஆண்டில்பூலித்தேவன் என்ற பாளையக் காரர் ஆவார். முதல் ஆங்கிலத் தளபதி ஆன "இன்னிஸ்"என்பவரை எதிர்த்துக் குரல் கொடுத்துப்போர்க்களமும் சென்றார்."திருநெல்வேலிச் சீமையிலேயே அதிக சுதந்திரப் போராளிகள் இருந்திருக்கின்றனர்என்பதும் ஒரு முக்கியமான உண்மை ஆகும். இந்தத் திருநெல்வேலிச் சீமையிலே, சங்கரன்கோவில்லுக்குத் தென்மேற்கே, "நெற்கட்டான் சேவல்" என்னும் ஊரின் பாளையக் காரர்ஆன பூலித் தேவனின் தந்தை பெயர் சித்திரபுத்திரத் தேவன், தாயார் சிவஞானம்நாச்சியார். 1715-ல் பிறந்த இவர், மனைவி பெயர் கயல்கன்னி நாச்சியார். மூன்றுமக்கட்செல்வங்கள். கோமதி முத்து தலவச்சி, என்ற பெண்ணும், சித்திரபுத்திரத்தேவன், சிவஞான பாண்டியன் என்ற இரு ஆண் மகவுகளும் உண்டு. அப்போதுபாஞ்சாலங்குறிச்சியை ஆண்டு வந்தது கட்டபொம்மனின் தாத்தா, பின்னர் கட்டபொம்மனின்தந்தை ஜெகவீர பாண்டியன் ஆகியோர். கட்டபொம்மன் பிறக்கும் முன்னாலேயே ஆற்காடுநவாபுக்கும், ஆங்கிலக் கம்பெனியாருக்கும் கப்பம் கட்ட மறுத்துக் குரல் கொடுத்தமுதல் பாளையக் காரர் பூலித் தேவன்.

உண்மையில் இவர்தான், என் அப்பன், பாட்டன், பூட்டன் வாழ்ந்த இந்தப் பூமியில்வாழ்ந்து வரும் நான் எங்கிருந்தோ வந்த வெள்ளையர்களுக்கு ஏன் கப்பம்கட்டவேண்டும் என்று உரத்துக் குரல் கொடுத்தார். 1755-ம் ஆண்டு, கப்பம் வசூல்செய்ய வந்த ஆங்கிலத் தளபதி அலெக்சாண்டர் ஹெரானோடு யுத்தத்தில் வெற்றி பெற்றார்.இந்திய விடுதலைப் போரின் முதல் வெற்றியும் இதுவே. ஆனால் இந்தப் போர் இத்துடன்முடியாமல் தொடர்ந்து 15 ஆண்டுகள் நடந்தது. விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயேஇத்தனை நீண்ட போரோ, அல்லது முதல் கூட்டணியை அமைத்தோ யாரும் போர் தொடுத்ததாய்இல்லை. இவரே முதலில் அத்தகைய சாதனை புரிந்தார். போரில் பூலித் தேவனை வெற்றிகொள்ள முடியாத கும்பினியார், தங்கள் சார்பாகப் பூலித் தேவனுடன் சண்டை போடகான்சாகிபு (மருத நாயகம்) என்னும் தமிழனை அனுப்பி வைத்தனர். மூன்று ஆண்டுகள்கான்சாகிபு, பூலித் தேவனுடன் சண்டை போட்டார். தொடர்ந்து வெற்றி பெற்ற பூலித்தேவன் இறுதியில் 1761-ல் கான் சாகிபிடம் தோல்வி அடைந்தார். எனினும்கடலாடிக்குத் தப்பிய பூலித் தேவனைப் பிடிக்க முடியாமல் கோபம் கொண்ட கான்சாகிபு,பாளையூர், நெற்கட்டான் சேவல், வாசுதேவ நல்லூர், ஆகிய ஊர்களில் இருந்த பூலித்தேவனின் கோட்டைகளை இடித்துத் தரை மட்டமாக்கினார். ஆனால் காரணம் சரிவரத்தெரியாமலேயே கான்சாகிபு வெள்ளையர்களால் 1764-ல் தூக்கிலிடப் பட்டான்
ஆகவே அவன் இறந்ததும் திரும்பி வந்த பூலித் தேவன், ஆட்சியைக் கைப்பற்ற, கோபம்கொண்ட கும்பினியார், 1767-ல் டொனால்டு காம்பெல் என்பவரை அனுப்பி பூலித் தேவனின் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைக் கைப்பற்றித் தாக்க முற்பட்டனர். தொடர்ந்து பெய்த பெருமழையாலும், ஏராளமான வீரர்கள் இறந்ததாலும், எஞ்சிய படையுடன் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சென்று மறைந்து கொண்டார் பூலித் தேவன். மனைவ, மக்கள் உயிருடன் கொளுத்தப் பட்டனர் கும்பினியாரால். மனைவி மரணம் அடைய, தீக்காயங்களுடன், மக்கள் காப்பாற்றப் பட்டு கும்பினியாருக்குத் தெரியாமல் வளர்க்கப் பட்டனர். பின்னரும் மனம் கலங்காமல் கும்பினியாரை எதிர்த்துக் கொண்டே வந்தார் பூலித் தேவன். மக்கள் சக்தி அவர் பக்கமே இருந்தது. நுண்ணறிவுடனும், நிதானத்துடனும், படைகளை நடத்திச் செல்லும் அறிவு கொண்ட பூலித் தேவன் ஆற்காடு நவாபின் சகோதரன் மாபூஸ்கான் தன்னிடம் சரண் அடைந்தபோது அவனை இரு கரம் நீட்டி வரவேற்று அவனுக்காகப் பள்ளி வாசல் கட்டிக் கொடுத்தார். எனினும் தலைமறைவாக இருந்த பூலித் தேவனைக் கைப்பற்றிச் சிறை எடுத்துப் பாளையங்கோட்டைக்குக் கொண்டு சென்ற போது, இறை வழிபாடு செய்யவேண்டி சங்கரன் கோவிலுக்குள் நுழைந்த பூலித் தேவன் பின்னர் திரும்பவில்லை என்று உறுதியாய்த் தெரியாத தகவல்கள் சொல்லுகின்றன.இதற்கு ஒரே அத்தாட்சி சங்கரன் கோயிலில் அம்மன் சன்னதிக்கு அருகே உள்ள "பூலித்தேவன் அறை" ஒன்றே ஆகும். ஒருவேளை 1767-ல் நடைபெற்ற கடைசி யுத்தத்தில் பூலித் தேவன் கொல்லப் பட்டிருக்கலாம் என்பவர்களும் உண்டு. இந்த விடுதலைப் போரைப் பற்றிய ஆவணங்கள், சென்னை, எழும்பூர், ஆவணக் காப்பகத்தில் உள்ளன.பெருமளவு குறிப்புகள் ஸ்டாலின் குணசேகரனின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. மேலும் ஆதாரங்கள் தேடப் படுகின்றன,.
"வரிக்குப் பதிலாக நெல்லாவது கொடு'' என்று கேட்ட போது, "வரி என்று நீ கேட்டால், ஒரு மணி நெல்லைக் கூட நான் உனக்குத் தர முடியாது'' என்று பூலித்தேவர் மறுத்துக் கூறினார். ஒரு மணி நெல் கூட தரமுடியாது-கட்ட முடியாது என்று சொன்ன காரணத்தால்தான் "நெல் கட்டான் செவல்'' என்று இந்த ஊருக்கே பெயர் வந்தது. நெல் கட்டான் செவல் என்பதுதான் திரிந்து நெல் கட்டும் செவல் என்று ஆகிவிட்டது என்பார்கள்.

1750 முதல் 1767 வரை ஏறத்தாழ 17 ஆண்டுகளில் பலமுறை வெள்ளைக்காரர்களோடு பூலித்தேவன் யுத்தம் செய்திருக்கிறார்.

*திருச்சியில் ராபர்ட் கிளைவ் உடன் போர் புரிந்ததாகப் "பூலித்தேவன் சிந்து''கூறுகிறது.

*அலெக்சாண்டர் கெரானுடன் 1755இல் போர் நடத்தியிருக்கிறார்.

*களக்காட்டில் மாபுஸ்கானுடன் 1755இல் போர் நடத்தியிருக்கிறார். அந்தப் போரில் மாபுஸ்கான் தோல்வியுற்றார். மாபுஸ்கானை அழைத்துவந்து தன்னுடைய மாளிகையிலேயே விருந்தாளியாக வைத்து மரியாதையோடு நடத்தினார் என்று வரலாறு கூறுகின்றது

*திருவில்லிப்புத்தூரில் ரகீமுடன் 1755இல்போர் நடத்தினார்.

*திருநெல்வேலியில் 1756இல் போர் நடத்தினார்.

*நெல்கட்டும் செவலில் 1759இல் யூசுப்கான் என்று சொல்லப்படுகின்ற கான்சாகிப்போடு போர் நடத்தியிருக்கிறார்.

*வாசுதேவநல்லூரில் 1759 மற்றும் 1760 ஆகிய ஆண்டுகளில் யூசுப்கானுடன் மீண்டும் போர் நடத்தியிருக்கிறார்.

*1761இல் நெல்கட்டும் செவல், வாசுதேவநல்லூர் கோட்டைகளில் அதே யூசுப்கானுடன் மறுபடியும் போர் நடத்தினார்.

*1767இல் வாசுதேவநல்லூரில் ஆங்கிலத்தளபதி டோ னால்டு காம்பெல் உடன் நடத்திய போர்தான் இறுதிப் போராகும்.இவற்றைத் தவிர கங்கை கொண்டான், ஆழ்வார் குறிச்சி, சேத்தூர், கொல்லங்கொண்டான், ஊத்து மலை, சொக்கம்பட்டி, தலைவர் கோட்டை ஆகிய கோட்டைகளில் நடைபெற்ற போர்களிலும் பூலித் தேவன் பங்கு பெற்றார்.

மாவீரன் மருதநாயகம் என்ற கான்சாகிப்பின் வரலாற்றை அறிந்து கொள்ள 'கான்சாகிப் சண்டை' என்ற கதைப்பாடல் பேராசிரியர் நத்தர் ஷா அவர்களுக்கு மிகவும் உதவி புரிந்துள்ளது. அதே போல் முனைவர் ந. இராசையா அவர்கள் பூலித்தேவனின் வரலாற்றை எழுத பூலித்தேவன் ஓயில் கும்மிப் பாடல், பூலித்தேவன் சிந்து, பூலித்தேவன் கதைப் பாடல் முதலியன மிகவும் உதவிகரமாக இருந்திருக்கின்றன.வட்டாரம் வாரியாக வாழ்ந்த குறுநில மன்னர்களின் வரலாறுகளைத் தொகுக்கவும். இன்றைக்கு நாட்டார் பாடல்களும், நாட்டார் சொல் கதைகளும்; கதைப் பாடல்களும் மிகவும் உதவுகின்றன.நெல்கட்டும் செவலைச் சுற்றி உள்ள குகைகளின் பெயர்களும், ஊர்களின் பெயர்களும், பாதைகளின் பெயர்களும், குளங்களின் பெயர்களும், ஊர்களின் பெயர்களும் கூட மாவீரன் பூலித் தேவனின் வரலாற்றைச் சொல்லாமல் சொல்லும் சான்றாதாரங்களாகத் திகழ்கின்றன. அத்தகைய சில சொற்றொடர்களையும், அத்தொடர்களோடு தொடர்புடைய வரலாற்றுச் செய்திகளையும் இனிப் பார்ப்போம்.

வாசு தேவ நல்லூருக்கு மேற்கே, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குகையின் பெயர். பூலித்தேவர் குகை என்பதாகும். ஆங்கிலேயருடன் பூலித்தேவன் யுத்தம் செய்த காலத்தில் ஆங்கிலேயரின் படைகளை மறைந்திருந்து தாக்க, பூலித்தேவர், தன் படைகளுடன், இந்த இடத்தில் தங்கி இருந்தார். எனவேதான் இக்குகைக்கு பூலித்தேவர் குகை என்று பெயர் வந்தது என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.

இவ்வாறு ஊரை விட்டு வெகு தூரம் விலகி உள்ள இக்குகைக்கு அருகில் உள்ளபாறை ஒன்றின் பெயர், 'சோறூட்டும் பாறை' என்பதாகும். "பாறை எப்படிச் சோறூட்டும்?” என்று இப்பகுதி மக்களிடம் விசாரித்த போது பூலித்தேவனோடு தொடர்புடைய , ஒரு செய்தியை இப்பகுதியில் வாழும் மக்கள் சொன்னார்கள்.
பூலித்தேவரும், அவரது படையைச் சேர்ந்த போர் வீரர்களும், இக்குகையில் வாழ்ந்தபோது பகலெல்லாம் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டார்கள். இரவில் அடுப்பு அமைத்துத் தீமூட்டிச் சமையல் செய்தால் அத்தீயின் வெளிச்சம் எதிரிகளுக்கு, படைவீரர்கள் மறைமுகமாகத் தங்கி இருக்கும் இடத்தைக்காட்டிக் கொடுத்து விடும் என நினைத்து பாறையின் கிழக்குப் பகுதியில் உள்ள ஊர்களில் வாழ்கின்ற மக்களிடம், இன்ன இன்ன கிழமையில், இன்ன இன்ன ஊரில் வாழ்கின்ற மக்கள், சோறு சமைத்தும் குழம்பு வைத்தும், கரு, கரு என்று பொழுது மயங்கிய கருக்கல் நேரத்தில், சோற்றை, பெரிய, பெரிய நார்ப்பெட்டிகளில் தட்டியும், குழம்பை அந்த நார்ப்பெட்டியின் மேல் மண் சட்டிகளில் வைத்தும், குறிப்பிட்ட ஒரு பாறையின் மேல் வைத்துவிட வேண்டும் என்று மன்னர் பூலித்தேவர் உத்தரவிட்டிருந்தார்.மன்னரின் உத்தரவுப்படியே, அப்பகுதி மக்களும், பகலெல்லாம் சமையல் செய்து, அந்திக் கருக்கல் நேரத்தில், சோற்றைப் பெரிய, பெரிய நார்ப்பெட்டிகளில் போட்டும், அதற்கு ஏற்ப குழம்பு கூட்டு முதலியவற்றை, பெரிய பெரிய மண்சட்டிகளில் ஊற்றியும் சுமந்து கொண்டு போய், குறிப்பிட்ட அப்பாறையின் மேல் வைத்துவிடுவார்கள். பொழுது இருட்டும் வரை, ஊர்க்காரர்களில் ஒன்றிரண்டு பேர், அச்சோற்றுக்குக் காவலும் இருப்பார்கள், காட்டில் வாழும் நரி, கரடி முதலிய மிருகங்கள் அச்சோற்றையோ, குழம்பையோ, கொட்டிவிடாமல் இருப்பதற்காக. பொழுது இருட்டிய பிறகு குகையில் தலைமறைவாகத் தங்கி இருக்கும். படை வீரர்களில் சிலர் வந்து பாறையின் மேல் ஊர் மக்களால் சமையல் செய்து வைக்கப்பட்டிருக்கும் சோற்றையும் குழம்பையும் தூக்கிக் கொண்டு செல்வார்களாம்.சோற்றுக்குக் காவலிருக்கும் ஆட்கள் தான் கொண்டு வந்திருந்த வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை முதலியவைகளையும் படைவீரர்களிடம் கொடுத்து அனுப்புவார்களாம். இப்படியாக தலைமறைவாக வாழ்ந்து ஆயுதப்பயிற்சி பெற்ற பூலித்தேவருக்கும், அவரின் படை வீரர்களுக்கும், தேவையான, சாப்பாடும், தாம்பூலமும் வெற்றிலை, பாக்கு முதலியவை இப்பாறையின் வாயிலாக ஊர் மக்களிடம் இருந்து சென்றது. எனவே இப்பாறையை இன்றும் இப்பகுதி மக்கள் "சோறு ஊட்டும் பாறை" என்ற பொருத்தமான பெயரால் அழைக்கின்றார்கள்

நெற்கட்டான் செவ்வலுக்குத் தென்புறமும் பெரிய 'மேடு' போன்ற ஒரு பகுதி உள்ளது. அந்த இடத்தை, மக்கள் 'கான்சா மேடு' என்று அழைக்கின்றார்கள். ஏன் அப்பகுதிக்கு அப்பெயர் வந்தது என்று விசாரித்த போது; இந்த இடத்தில்தான் கான்சாகிப் சுமார் பதினெட்டு பவுண்டு எடையுள்ள பீரங்கிகளை அமைத்து, நெற்கட்டுஞ் செவல் கோட்டை மீது தாக்குதல் நடத்தினார். எனவே தான் இப்பகுதிக்கு, 'கான்சா மேடு' என்ற பெயர் வந்தது என்றார்கள்.ஆங்கிலேயர்களை எதிர்த்து பூலித்தேவர் போரிட்ட காலத்தில், நெல்கட்டுஞ் செவலுக்கு அருகில் உள்ள பாளையக்காரரான கொல்லங் கொண்டான் ஜமீனைச் சேர்ந்த வாண்டாயத் தேவன், பூலித் தேவருக்கு மிகவும் உதவியாக இருந்தார். இதனால் ஆங்கிலேயர்கள் கொல்லங்கொண்டான் மீதும் படையெடுத்துச் சென்றார்கள். ஆங்கிலேயப் படைகளால் வாண்டாயத் தேவனின் கொல்லங்கொண்டான் கோட்டை முற்றுகை இடப்பட்டது. அப்போது வாண்டாயத் தேவனின் மனைவி கர்ப்பிணியாக இருந்தாள் தேவைப்பிள்ளையைக் கருவில் சுமந்திருந்தாள்.போர் நடைபெறும் போது ஒருவேளை தோல்வியைத் தழுவ நேரலாம், அல்லது வீர மரணத்தைத் தழுவ வேண்டிய நிலை வரலாம். எனவே, தன் குல வாரிசைக் கருவில் தாங்கி நிற்கும். தன் மனைவியை, அரண்மனையில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று வாண்டாயத் தேவன் நினைத்தார். எனவே, தனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரின் துணையுடன் தன்மனைவியை, ரகசிய வழி ஒன்றின் மூலம் அரண்மனையை விட்டு வெளியேறச் செய்தார்.இரவோடு, இரவாக, அரண்மனையை விட்டு வெளியேறிய வாண்டாயத் தேவனின் மனைவி, தன் நாட்டின் எல்லையில் உள்ள ஒரு ஊரில் போய் மக்களோடு மக்களாகக் குடியேறினார்.
எதிர்பார்த்தது போலவே, ஆங்கிலேயருடன் நடந்த யுத்தத்தில் வாண்டாயத் தேவன் கொல்லப்பட்டார். என்றாலும், அவரின் மனைவியான நாச்சியார், மனத்திடத்துடன் மக்களோடு மக்களாக எளிய வாழ்க்கை வாழ்ந்து, குறிப்பிட்ட காலத்தில் அழகான ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். தாயையும் சேயையும், அவ்வூர் மக்கள் உதவிகள் புரிந்து பாதுகாத்து வந்தார்கள்.அரண்மனையில் பிறந்து வளர்ந்து ஒரு பாளையக்காரருக்கு மனைவியாக வாழ்க்கைப் பட்ட நாச்சியார், காலம் செய்த கோலத்தால் வெள்ளையரின் படை எடுப்பில் பஞ்சைப் பதாரி போல், ஏழைய, எளிய மக்களுடன் வாழ நேர்ந்த காரணத்தால், பிற்காலத்தில் அவ்வூரையே மக்கள் 'பஞ்சம் பட்டி' என்று அழைத்தார்கள் என்று அவ்வூரைச் சேர்ந்த தகவலாளர் ஒருவர் கூறினார்.கொல்லங்கொண்டான் பாளையக்காரரான வாண்டாயத் தேவனின் கோட்டைக்கு அருகில் இடர் தீர்த்த பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நாட்டியமாட மயிலாள், குயிலாள் என்ற இரண்டு தேவதாசிப் பெண்களை நியமித்திருந்தார் வாண்டாயத் தேவன்.ஆங்கிலேயர்களுடன் போர் தொடங்கிய காலத்தில், வெள்ளையர்களின் படை பலத்தை அறிந்து கொள்வதற்காகவும், உளவுபார்த்து வரவும் இவ்விரு நடன மங்கையர்களை வாண்டாயத் தேவன். அக்கம்பக்கத்துப் பாளையங்களுக்கும் அனுப்பி வைத்தார். இப்படி, கலைப்பணியையும், அரசியல் பணியையும் ஒருசேரச் செய்த சகோதரிகளுக்கு, இருகுளத்துப்பரவுகளை (குளத்துநீர் பாயும் வயல்களை) தானமாகக் கொடுத்துள்ளார். வாண்டாயத் தேவர் அக்குளங்கள் இன்றும் குயிலாள் குளம்; மயிலாள் குளம் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகின்றன.பூலித்தேவர் காலத்தில் இருந்து சிவகிரி உள்ளிட்ட தென்பகுதி பாளையக்காரர்கள் மேல் படை எடுத்து வர மருதநாயகம் என்ற கொமந்தான் கான்சாகிப், ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலேயர்கள், திருவில்லிபுத்தூர் கோட்டையைத்தான் ஒரு நுழைவு வாயிலாகப் பயன்படுத்தினார்கள். எனவே இன்றும் திருவில்லிபுத்தூரில் உள்ள அக்கோட்டை 'தலைவாசல்' என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. இக்கோட்டையைச் சுற்றிலும் உள்ள, கொம்மந்தான்புரம், மம்சாபுரம், கான்சா புரம் என்ற ஊரின் பெயர்கள், கொமந்தான்புரம் என்ற கான்சாகிப் என்ற முகம்மது யூசுப் கான் என்ற மருத நாயகம் இப்பகுதியில் படை எடுத்து வந்தபோது முகாமிட்டுத் தங்கி இருந்த காரணத்தால் சூட்டப் பட்டது என்று இப்பகுதியில் வாழும் தகவலாளர்கள் கூறுகின்றார்கள்.

பூலித்தேவர் படையின் தளபதியாக இருந்தார் 'பெரிய காலாடி' என்பவர். இவர் தேவந்திரகுல வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். கான்சாகிப்பின் படைகள், காட்டில் முகாமிட்டிருந்த செய்தியை அறிந்த பெரிய காலடி சில வீரர்களுடன் சென்று அம்முகாமைத் தாக்கினார். அப்போது எதிரி வீரன் ஒருவன் மறைந்திருந்து தாக்கியதால் காயமுற்றார் என்றாலும் வயிறு கிழிக்கப்பட்டு, குடல் வெளியே வந்தநிலையிலும், தான் தலைப் பாகையாகக் கட்டியிருந்த துண்டை எடுத்து, வெளியே வந்த தன் குடலை மீண்டும் வயிற்றுக்குள் தள்ளி, தன் வயிற்றைத் துண்டால் கட்டிக் கொண்டு, தன் உயிர் போகும் வரை கடலாக எதிரிகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்தார். தன் தளபதி பெரிய கடலாடி எதிரிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்த இடத்தில், பிற்காலத்தில் பூலித்தேவர், வீரக்கல் (நடுகல்) ஒன்றை நட்டு வைத்தாராம். அந்த இடம் இன்றும் இப்பகுதி மக்களால் 'காலாடி மேடு' என்று அழைக்கப்படுகிறது.பூலித் தேவன் சிந்தும், காலாடியின் புகழை,

"கடமை வீரனப்பா;
காலாடி வீரனப்பா
சூராதி சூரனப்பா;
சூழ்ச்சியில் வல்லவனப்பா"

என்று பேசுகிறது.நாட்டுப் புறப்பாடல்களிலும், நாட்டுப்புறக்கதைப் பாடல்களிலும் தேடினால் நம் நாட்டு விளிம்பு நிலை மக்கள் வீரதீரத்துடன் எப்படி எல்லாம் நம் நாட்டின் விடுதலைக்காக உழைத்தார்கள் என்ற செய்திகளை நாம் அறிந்து கொள்ள முடியும்.

பூலித்தேவன் கும்மிப் பாடல்,
"ஒண்டிவீரன் என்ற பூலித் தேவனின் தளபதி. தனி ஆளாகச் சென்று வெள்ளையர்களுக்கு எதிராக வீரதீரச் செயல்களைப் புரிந்து, கடைசியில் தானே தன் கையை வெட்டிக் கொண்டு செத்தான்" என்ற வரலாற்றைச் சொல்கிறது.பூலித்தேவன் மேல் படை எடுப்பதற்காக, கும்பினியர்கள் தென்மலை என்ற இடத்தில் முகாமிட்டிருந்தார்கள். கும்பினியர், புலீத் தேவனின் படை வீரர்கள் சண்டையிட வரும்போது அவர்கள் மீது பீரங்கியால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு அவற்றில் வெடி மருந்தும் நிரப்பி வைத்திருந்தார்கள்.
பரங்கியர்களின் நவீன யுத்த ஆயுதமான பீரங்கிகளை எதிர் கொள்வதுதான் அன்றைக்கு வெள்ளையர்களை எதிர்த்து யுத்தம் செய்யும் பாளைக்காரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. எனவே, வெள்ளையர்கள் தமிழ் வீரமறவர்களை அழித்து ஒழிக்கப் பயன்படுத்தும், பீரங்கியையே பரங்கிப் படைகளுக்கு எதிராகத் திருப்பிவிட வேண்டும் என்று நினைத்தார் பூலித்தேவர்.

அப்பணியைச் செய்வதற்குச் சரியான ஆள் ஒண்டிவீரன்தான் என்று முடிவு செய்து, பரங்கியரின் முகாமிற்கு ஒண்டி வீரரை அனுப்பி வைத்தார் பூலித்தேவர்.இரவு வேளையில் மை இருட்டில் தென் மலையில் உள்ள பரங்கியரின் முகாமிற்குச் சென்றான் ஒண்டி வீரன்.கும்பினிப் படைவீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு முகாம் ஓரமாய் உள்ள மலைச் சரிவில் ஒண்டி வீரன் பதுங்கிக் கிடந்தான். தான் பதுங்கி இருப்பதைப் பரங்கிப் படையினர் பார்த்து விடக்கூடாது என்பதற்காக, தன்மேல், இலைதளைகளையும், செத்தல் செருவில்களையும் தானே அள்ளிப் போட்டுக் கொண்டு படுத்துக் கிடந்தான்.அப்போது அங்கு வந்த கும்பினிப்படை வீரன் ஒருவன், குதிரை ஒன்றைக் கட்டுவதற்காக இரும்பாலான ஆப்பு ஒன்றைத் தரையில் அறைந்தான் பரங்கி வீரன், இருட்டில் ஆப்பை வைத்துச் சம்மட்டியால் அறைந்த இடம் ஒண்டி வீரனின் புறங்கையாக இருந்தது. பரங்கி வீரன் அடித்த ஆப்பு ஒண்டி வீரனின் கையைத் துழைத்துக் கொண்டு, இரத்தக் கசிவுடன், பூமிக்குள் பாய்ந்தது.ஒரு ஊசி குத்தினாலே தன்னை அறியாமல், நாம் சத்தம் போட்டுவிடுகிறோம். ஆனால், ஏசு நாதரை, உயிரோடு வைத்துச் சிலுவையில் அறைந்ததைப் போல், வெள்ளைப் பரங்கி வீரன், ஒண்டி வீரனின் கை மேல் ஆப்பை வைத்து அறைந்தான். இப்போது, லேசாகச் சத்தம் கொடுத்தாலும், பீரங்கிப் படை வீரன் தன்னைக் கண்டுபிடித்துவிடுவான். கண்டுபிடித்தால் கொன்று விடுவான் என்பது நிச்சயம், ஆனால் மன்னர் பூலித்தேவன் தன்னிடம் ஒப்படைத்த வேலையைச் செய்ய முடியாமல் சாக வேண்டிய நிலைவரும் என்று எண்ணிய ஒண்டி வீரன் பல்லைக் கடித்துக் கொண்டு, ஆப்பு தன் கையைத் துளைக்கும் போது ஏற்பட்ட வலியைப் பொறுத்துக்கொண்டான். ஆப்பை ஒண்டி வீரனின் கையோடு சேர்த்து தரையில் அறைந்த வெள்ளையன் அந்த ஆப்பில் ஒரு குதிரையைப் பிடித்துக் கயிற்றால் கட்டி விட்டுத் தன் முகாமிற்குச் சென்றுவிட்டான்.
இப்போது ஆப்பில் இருந்து தன் கையை விடுவிக்க வேண்டும், என்ன செய்ய? மறுகையில் ஆப்பை அசைத்துப் பிடுங்கலாம் என்றால் ஆப்பு பூமியில் ஆழமாகப் புதைந்து உள்ளது. ஆப்பை அசைத்தால், புண்ணான அவனது இடது கை மேலும் வலிக்கும். எனவே வலது கையால், தன் இடுப்பில் சொறுகி இருந்த வாளை உருவி தன் இடது கையை முட்டுக்குக் கீழே, தானே ஓங்கி வெட்டுகிறான் ஒண்டி வீரன்.தன் கையைத் தானே ஒரே வெட்டில் வெட்டித் துண்டாக்கினால் எப்படி வலித்திருக்கும் என்பதை இந்த இடத்தில் வாசகர்கள் எண்ணிப் பார்த்துக் கொள்ளவும். இப்போதும் வலியால் சத்தம் கொடுத்தால், பரங்கிப் படை வீரர்கள், அவனைப் பிடித்துக்கொள்வார்கள். மன்னர் கொடுத்த வேலையைச் செய்து முடிக்க முடியாது போகலாம். எனவே, தானே தன் கையை வெட்டிய வலியையும் தாங்கிக் கொண்டு ஒண்டி வீரன். உதிரம் ஒழுகும் கையோடு, மெல்ல, மெல்ல, ஊர்ந்து பரங்கிப் படையினர் பீரங்கியை வைத்திருக்கும் இடத்திற்குப் பதுங்கிச் சென்று அப்பீரங்கியின் வாயை கும்பினியரின் படைகள் தங்கி இருக்கும். திசையை நோக்கிச் சரியாகத் திருப்பி வைத்து, அப்பீரங்கியை வெடிக்கச் செய்துவிட்டு, கும்பினியனின் குதிரை ஒன்றில் ஏறி, அங்கிருந்து தப்பித்து வரும் ஒண்டி வீரன்-

"என் அங்கக்கை போனால் என்ன- எனக்குத் தங்கக்கை தருவான் பூலிமன்னன்"

என்று பாடிக் கொண்டே வந்ததாக பூலித் தேவன் கும்மிப்பாடல் குறிப்பிடுகிறது.தான் செய்த தவறுக்காக, தன் கையையே வெட்டிக் கொண்டு, தன் சொந்தக் கைக்குப் பதில் பொன்னாலாகிய கையைப் பொருத்திக் கொண்டு வாழ்ந்த பொற்கைப் பாண்டியனை நாம் வரலாற்றின் ஏடுகளில் வாசித்திருக்கிறோம்.இங்கே, நாட்டுக்காக, தேச விடுதலைக்காக, "தன் மன்னன் கொடுத்த பணியை, உயிரைக் கொடுத்தேனும் கனகச்சிதமாய்ச் செய்து முடிக்க வேண்டும்" என்று செயல் பட்டு தன் இடது கையைத் தானே துண்டித்துக்கொண்ட ஒரு மாவீரனை நாட்டார் பாடல்களில் நாம் தரிசிக்கின்றோம்
THANK TO
MUTHURAMALINGAM FOR ARTICL THREE
JOTHI KUMARAN FOR PHOTO'S

No comments: